ஆசிரியர் கல்விச் சுற்றுலாவுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு-30-12-2011
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில், இடைநிலைக் கல்வியான, 9 மற்றும் 10ம் வகுப்பு கல்வித் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் நிதியுதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி, புதிய வகுப்பறை கட்டடம், புதிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.சேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், 16 ஆயிரம் தமிழக ஆசிரியர்கள் கல்விப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
நடப்பு கல்வியாண்டில், 9 மற்றும் 10ம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக, கல்விப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா, 500 பேர் வீதம், தமிழகம் முழுவதும், 16 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கல்விப் பயணத்துக்காக, ஒவ்வொருவருக்கும் தலா, 5,000 ரூபாய் வீதம், 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்விப் பயணம், வட மாநில சுற்றுப் பயணத்துக்கு, 100 பேர், தென் மாநில சுற்றுப் பயணத்துக்கு, 150 பேர், தமிழக சுற்றுப் பயணத்துக்கு, 100 பேர், மாவட்ட சுற்றுப் பயணத்துக்கு, 140 பேர், கடல் கடந்து செல்லும் பயணத்துக்கு, 10 பேர் என, ஐந்து பிரிவாக, 500 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. கல்விப் பயணம் மேற்கொள்ளும் பயண நாள், வேலை நாட்களாக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இக்கல்விப் பயணத்தை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் இந்திய ரயில்வே துறையினர் இணைந்து நடத்துகின்றனர்.
இதற்கான பயணச் செலவு, உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் ஏற்றுக்கொள்கிறது. இதற்கான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை, மாவட்டந்தோறும், ஜனவரி 3ம் தேதிக்குள் கூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.