பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி நியமனம்-24-12-2011
தமிழகத்தில் கல்வித் துறையை மேம்படுத்த தமிழக அரசு அதீத அக்கறை செலுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலக்கோடு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு இல்லாமல் முதல் றையாக துறை அதிகாரிகளே பணி நியமனம் செய்கின்றனர்.
அந்த வகையில், பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் பணி துவங்கியது.
வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 2,804 பேர் பள்ளிக் கல்வித் துறைக்கும், 1,155 பேர் துவக்கக் கல்வித் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுவரை காலியாக உள்ள பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கான பள்ளிகளை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யும் முறை இருந்தது. ஆனால் இம்முறை கலந்தாய்வின்றி, பள்ளிக் கல்வி இயக்குநரகம், 2,804 ஆசிரியருக்கும், அவர்கள் பணியாற்ற வேண்டிய பள்ளியை தேர்வு செய்து பணி நியமன ஆணையை தபாலில் அனுப்பி வைத்தனர். அதன்படி, ஆசிரியர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணிக்கு சேர்ந்தனர்.
அதேப்போல, துவக்கக் கல்வித் துறை அதிகாரிகளும், 1,155 ஆசிரியர்களுக்கான பள்ளிகளை தேர்வு செய்து அது குறித்த விவரத்தை தபாலில் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஜனவரி 2ம் தேதிக்குள் பணிநியமன ஆணை ஆசிரியர்களிடம் கிடைக்கும் வகையில் துரிதமாக பணி நடந்து வருகிறது.
ஆனால், இது குறித்த எந்த முன்னறிவிப்பும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. எப்போது கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ளனர். அதிகாரிகளே பணியிடத்தை தேர்வு செய்வதால் பலருக்கும் வேறு மாவட்டங்களில் வேலை கிடைத்து அதனால் அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.